Sunday, November 8, 2009

நட்புதிர் காலம்!

இலையுதிர் காலம் போல்
எனக்கு வாய்த்ததோர்
நட்புதிர் காலம்!
உதிர்ந்தவற்றை விட மனமின்றி
ஓடி ஓடி ஒட்ட வைத்தேன்!
உள்ளிருந்து பூத்த நிலை மாறி
இடையில் பசைத் தேவைப்படினும்..
ஒட்டித்தான் இருந்தன!
ஒவ்வொரு காற்றிலும்
படபடக்கிறது இதயம்!
உதிர்க்கவும் மனமின்றி
மீண்டும் வேர் விடவும் வழியின்றி
இருந்தும் இல்லாத
நட்பு வெளியில்
வசந்தத்தைத் தொலைத்துவிட்டு
கழியுது காலம்!

Saturday, August 29, 2009

அமிலம்

கதறி அழத் தோன்றும்
ஒவ்வொரு முறையும்
அதை அடக்கி
மேல் எழுகிறது
ஆவேசம்!
இதயத்துள் அழுத்தி
புதைத்து வைக்கும்
ஒவ்வொருத் துளிக் கண்ணீரும்
அமிலமாய் இறுகி
தகிக்கின்றது!
அழுத்தம் தாங்காது
வெடித்துச் சிதறும் நாளில்
பிறக்கும் விடுதலை!

Thursday, July 30, 2009

துயரத்தின் கங்கு ...

திடுக்கிட்டு விழிக்கும்
ஒவ்வொரு இரவிலும்
கண்முன்
கோர உருவம் எடுத்து நிற்கிறது
சாவு!
துகள் துகளாய்
நொறுங்கி போன
கனவின் துண்டுகள்
குத்திக் கிழித்து
இரத்தத்தால் எழுதிய
உண்மையின்
கனம் தாளாது
ஒடுங்கும் மனது!
இழப்பின் வலியை
கண்ணீராய்
கரைய விடாத பிடிவாதம்!
துயரத்தின் கங்கு
கனன்று கனன்று
உருப்பெறும்..
தீப்பிழம்பாய்..!

Tuesday, April 21, 2009

விடையில்லா கேள்விகள்

சாவின் கொடிய கரங்கள்
இதயத்தை பிசையும்
இரவுப் பொழுது!
மீட்டெடுக்க இயலா
இழப்பின் வலி
ஒவ்வொரு நரம்பிலும்!
ஆற்றிக் கொள்ள இயலா
ஆதங்கம்..
அழுகையாய்.. அச்சமாய்..
அழுத்தும்
கொடிய கணங்கள்!
ஆசையும் கனவும்
அழித்தொழிந்த ஏமாற்றம்!
வேதனை..
இழந்த உறவிற்கா..
தகர்ந்த நம்பிக்கைக்கா..
நிறைவேறாத கனவுக்கா..?
விடையில்லா கேள்விகளின்
துரத்தலுக்கு நடுவே..
திசையறியா பறவையாய்
தவிக்கும் மனது!

Tuesday, April 7, 2009

நட்பின் வெளிச்சம்!

இரவின் அமைதி
பேரிரைச்சலாய்..!
தனிமையின் ஓலம்!
இருட்டின் கனத்தில்
ஒடுங்கிய மனதிற்கு..
கீற்றாய்
உன் நட்பின் வெளிச்சம்!
நம்பிக்கை!
நகர்ந்து நெருங்க
சுட்டு அணைந்தது..!
மீண்டும் இருட்டு!
மேலும் அடர்த்தியாய்!

Thursday, April 2, 2009

தேவை!

எனது தேவையெல்லாம்
என் மன பாரங்களை
இறக்கி வைக்க
ஒரு தோள்..
முடிந்தால்
நான் சொல்வதை
முழுமையாகக் கேள் ..
உன் கரங்களால்
என் கண்ணீரைத்
துடைத்து விடு ..
அணைத்துக் கொள்
ஆதரவாய் ..
குறைந்த பட்சம்
புரிதலாய் ஒரு பார்வை ..
அது போதும் எனக்கு ..
என்னை கோழையாக்கி
அவமானப்படுத்தும்
உன் இரக்கம்
தேவையில்லை எனக்கு ..
உன் அறிவுரைகளையும்
ஆலோசனைகளையும்
உன்னுடனேயே வைத்துக்கொள்
தேவையெனில்
நானே கேட்பேன் ..
என் கண்ணீரின் மீதேறி
என்னை
ஆதிக்கம் செலுத்த
முயற்சிக்காதே ..
என்ன செய்ய வேண்டுமென்று
தெரியும் எனக்கு!