Tuesday, April 21, 2009

விடையில்லா கேள்விகள்

சாவின் கொடிய கரங்கள்
இதயத்தை பிசையும்
இரவுப் பொழுது!
மீட்டெடுக்க இயலா
இழப்பின் வலி
ஒவ்வொரு நரம்பிலும்!
ஆற்றிக் கொள்ள இயலா
ஆதங்கம்..
அழுகையாய்.. அச்சமாய்..
அழுத்தும்
கொடிய கணங்கள்!
ஆசையும் கனவும்
அழித்தொழிந்த ஏமாற்றம்!
வேதனை..
இழந்த உறவிற்கா..
தகர்ந்த நம்பிக்கைக்கா..
நிறைவேறாத கனவுக்கா..?
விடையில்லா கேள்விகளின்
துரத்தலுக்கு நடுவே..
திசையறியா பறவையாய்
தவிக்கும் மனது!

Tuesday, April 7, 2009

நட்பின் வெளிச்சம்!

இரவின் அமைதி
பேரிரைச்சலாய்..!
தனிமையின் ஓலம்!
இருட்டின் கனத்தில்
ஒடுங்கிய மனதிற்கு..
கீற்றாய்
உன் நட்பின் வெளிச்சம்!
நம்பிக்கை!
நகர்ந்து நெருங்க
சுட்டு அணைந்தது..!
மீண்டும் இருட்டு!
மேலும் அடர்த்தியாய்!

Thursday, April 2, 2009

தேவை!

எனது தேவையெல்லாம்
என் மன பாரங்களை
இறக்கி வைக்க
ஒரு தோள்..
முடிந்தால்
நான் சொல்வதை
முழுமையாகக் கேள் ..
உன் கரங்களால்
என் கண்ணீரைத்
துடைத்து விடு ..
அணைத்துக் கொள்
ஆதரவாய் ..
குறைந்த பட்சம்
புரிதலாய் ஒரு பார்வை ..
அது போதும் எனக்கு ..
என்னை கோழையாக்கி
அவமானப்படுத்தும்
உன் இரக்கம்
தேவையில்லை எனக்கு ..
உன் அறிவுரைகளையும்
ஆலோசனைகளையும்
உன்னுடனேயே வைத்துக்கொள்
தேவையெனில்
நானே கேட்பேன் ..
என் கண்ணீரின் மீதேறி
என்னை
ஆதிக்கம் செலுத்த
முயற்சிக்காதே ..
என்ன செய்ய வேண்டுமென்று
தெரியும் எனக்கு!