Saturday, December 25, 2010

மவுனம்!

மனதின் இரைச்சலுக்கு இடையே..
அடர்த்தியாய் அழுத்தும் மவுனம்!
இல்லாதது..
செய்தியா மனமா?
நட்புக்கு நேர்ந்தது..
ஊனமா மரணமா?
கேள்விகளின் கேலிக்கு நடுவே
'மிக இயல்பாய்" செல்லுது வாழ்க்கை!!

Thursday, December 23, 2010

நட்பும் சுடும்

உன் நட்பின் கதகதப்பில்
இதமாய் சாயத் தொடங்கும்
ஒவ்வொரு முறையும்
திட்டமிட்டோ
திட்டமிடாமலோ
தீயாய் சுட்டுத்
துரத்துகிறாய்!
வலியில் சுருங்கி
விலகிச் சென்றால்
விடாமல் வழி மறித்து
மீண்டும்
நட்புக் கரம் நீட்டுகிறாய்!
அகலவும் விடாமல்
அணுகவும் முடியாமல்
கொல்லாமல் கொல்கிறாய்!
தொடரும் இந்த போராட்டத்தில்
வெல்லப் போவது
நீயாகவோ
நானாகவோ
இல்லாமல்
நம்
நட்பாக இருக்க வேண்டும்
என்றே தவிக்கிறேன்!

Wednesday, September 22, 2010

அழகான தருணங்கள்

சில அழகான தருணங்கள்
அற்புத மனிதர்களால்
அரிய பரிசாய் கிடைக்கின்றன!
சுகிக்கத் தெரியாமல்
திகைத்து நிற்கும் நொடிகளில்
அவை
கரைந்து
நினைவாய் மட்டும் படிய
சுகிக்க மறந்த நொடிகளை
மீட்டி மீட்டி
கற்பனையில் சுகிக்கிறது...
மனம்!

Sunday, January 17, 2010

துயரின் கறை படிந்த கரங்கள்

நம்பிக்கைக்கான
ஒற்றைப் புள்ளியையும்
தொலைத்த வெறுமை!
திசைகள் எங்கும்
ஓலம்
வலி
வேதனை!
பூக்களை பறித்தும்
விளக்குகளை அணைத்தும்
நெறிக்கும் காலம்!
பற்ற
ஒரு துரும்பும் இன்றியும்
தொடரும் பயணம் ..
துயரின்
கறை படிந்த
கரங்களைத் தேடி
இறுக்கிக் கோர்த்து
நகரும்
ஒவ்வொரு அடியும்
வெளிச்சத்தைத் தேடி ..
அணையும்
ஒவ்வொரு விளக்கிலும்
மேலும் கரங்கள் இணையும்
முன்னிலும் இறுக்கமாய்!